நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்கம் மீட்பு.. 5 பேர் தப்பியோட்டம்.. போலீஸ் தீவிர வேட்டை
நெல்லையில் இன்று கொள்ளைப்போன 60 கிலோ தங்க நகைகள் வேலூரில் மீட்கப்பட்டுள்ளது.
வேலூர்: பாளையங்கோட்டையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அழகர் ஜூல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை முறையாக மூடிவிட்டு கடை ஊழியர்கள் சென்றனர்.
ஆனால் இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்தால் கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் மேற்கூரையை கொள்ளையர்கள் இரவோடு இரவாக உடைந்து உள்ளே நுழைந்து சுமார் 60 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். உடனே மாநகர துணை கமிஷனர் பிரதீப் குமார், கூடுதல் துணை கமிஷனர் இளங்கோ, குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்தது. நகைக்கடையின் அருகில் புதிய கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் கட்டப்பட்டுள்ள கம்புகள் வழியாக ஏறி நகைக்கடையின் மாடியை அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு கதவை கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு ஒவ்வொரு தளமாக வந்து நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பாளையங்கோட்டை அழகர் ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்க நகைகளும் வேலூர் அருகே மீட்கப்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில், போலீசார் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். காருக்குள் சோதனை செய்தபோது, 60 கிலோ தங்கம் இருந்தது. விசாரணையில் அது நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் என்பது தெரியவந்தது.
அதேசமயம், காரில் இருந்து இறங்கி தப்பிய 5 பேரும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க சுமார் 100 போலீசார் வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.