60 வயது மனைவியின் நடத்தை மீது 68 வயது விவசாயிக்கு சந்தேகம்.. அடித்தே கொன்றார்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 60 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை அடித்தே கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்புஜம். 60 வயதாகிறது. இவரது கணவர் பெயர் காத்தமுத்து. 68 வயதான இவர் விவசாயி ஆவார். வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார் அம்புஜம். இத்தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன். அனைவரும் திருமணமாகி செட்டிலாகி விட்டனர்.
காத்தமுத்து தினசரி குடிப்பார். குடித்து விட்டு மனைவியைப் போட்டு அடிப்பார். செலவுக்கும் பணம் தர மாட்டார். இதனால்தான் அம்புஜம் டீக்கடைக்கு வேலைக்குப் போயுள்ளார். இதனால் காத்தமுத்து தனது மனைவி நடத்தை குறித்து சந்தேகப்பட்டு சண்டை பிடித்துள்ளார்.
தினசரி இதே வேலையாகப் போய் விட்டது காத்தமுத்துவுக்கு. சம்பவத்தன்றும் இரவு வீட்டுக்கு வந்த காத்தமுத்து தனது மனைவியிடம் சண்டை பிடித்தார். அடித்துள்ளார். பின்னர் தூங்கி விட்டார். நள்ளிரவுக்கு மேல் எழுந்த அவருக்கு அம்புஜம் மீது ஆத்திரம் வந்துள்ளது.
இதையடுத்து வீட்டில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து சரமாரியாக அம்புஜத்தை அடித்துள்ளார். இதில் அம்புஜம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பின்னர் காத்தமுத்துவைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.