குன்னூரில் 60-வது பழக்கண்காட்சி.. அரியவகை பழங்களில் மீன், மயில், ரங்கோலி சிற்பங்கள்!
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60-வது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
Recommended Video
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பழக்கண்காட்சி பரிசளப்பு விழாவுடன் இனிதே முடிந்தது. 2 நாள் நடைபெற்ற இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரியவகை பழங்களினால் ஆன மீன், மயில், ரங்கோலி சிற்பங்களை சுற்றுலா பயணிகளை பெரிதும் கண்டுகளித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டுக்கான பழக்கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் வெகுபிரம்மாண்டமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பழக்கண்காட்சி துவங்கியது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுனன் தொடங்கிவைத்தார்.
ராட்சத யானை உருவம்
இதையொட்டி இப்பூங்கா முழுவதும் உள்ள அரிய வகை மரங்களின் அருகே தொட்டிகளில் மலர் அலங்காரமும் நுழைவுவாயிலில் 12 அடி உயரத்தில் பல்வேறு பழங்களால் அலங்கார வளைவு, 1 டன் எடையில் திராட்சை பழங்கள் மூலம் ராட்சத யானை உருவம் வைக்கப்பட்டது. இந்த பழக்கண்காட்சியில் திருச்சி, கடலூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத் துறை சார்பில் அரியவகை பழங்களை கொண்டு மீன், மயில், ரங்கோலி உள்பட பல்வேறு சிற்பங்கள் வைக்கப்பட்டன.
ஆதிவாசி மக்களின் தயாரிப்பு
அத்துடன் 30 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் பழங்களின் தன்மை, அதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை குறித்தும், தேயிலை, இயற்கை வேளாண்மை, மகளீர் சுய உதவிக்குழு மற்றும் ஆதிவாசி மக்களின் தயாரிப்பு பொருட்களும் இடம் பெற்றிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வெகுவாக கண்டுகளித்தனர்.
பரிசளிப்பு விழா
கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.ஆர்.அர்ஜூணன் துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். 2 நாள் பழக்கண்காட்சியின் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இப்பழக் கண்காட்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் ஆகியோர் பரிசு கோப்பைகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினர்.
இல்லந்தோறும் பழமரங்கள்
அப்போது விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மலை மாவட்டத்தில் விளையும் விக்கி பழம்,குரங்கு பழம்'தூரியன் உள்ளிட்ட பழங்களை பாதுகாக்க வேண்டும் என்றார். அனைவரின் வீடுகளிலும் ஒரு பழ மரமாவது வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆட்சியர், நம் மாவட்ட விவசாயிகள்பழ சாகுபடி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.