சில்லறை இல்ல.. ரேஷன் கடைய மட்டும் எப்படி நடத்த முடியும்.. 626 ரேஷன் கடைகள் மூடல்
பழைய நோட்டுகளை மாற்றும் பிரச்சனை தொடர்ந்து இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் 626 ரேஷன் கடைகள் மூடப்பட்டன.
திண்டுக்கல்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதில் சிரமம் நீடித்து வருவதாலும், மக்களிடம் சில்லறைப் பணம் இல்லாததாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 626 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதில் இருந்து மக்களிடம் பணப் புழக்கம் என்பது முற்றிலும் செயற்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றவே ஒரு நாள் முழுக்க வங்கிகளில் வாசலில் காத்துக்கிடக்கின்றனர். மேலும், தங்களுடைய பணத்தை எடுக்கவே ஏடிஎம் மையங்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.
இதனால் யாரிடமும் கையில் சில்லறைப் பணம் என்பதே இல்லாமல் போய்விட்டது. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்த பின்னர், அதனை மாற்றினால் மீதி பணத்தை கொடுக்க கடைகாரர்கள் திணறி வருகின்றனர். 100 ரூபாய் நோட்டை எடுத்து செலவு செய்யலாம் என்றால் ஏடிஎம் மையங்களின் மூலமாக வழங்கப்படும் 100 ரூபாய் நோட்டு பற்றாக்குறையாகவே உள்ளது. இதனால் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 626 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவதால் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைப் போன்றே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 197 கூட்டுறவு வேளாண் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் சாதாரண பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.