சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 63 பேர் விடுதலை
8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தி கைதான 63 பேர் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர்: சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 63 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களை போலீஸார் கைது செய்துவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருவண்னாமலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இணைந்து சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்தினர். இதில், போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 63 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.