அள்ள அள்ள குறையாத குப்பை... சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி தீவிரம்
சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 64,177 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமையன்று மட்டுமே 14,268 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான சென்னையில் தேங்கிய குப்பைகளை அகற்ற 95 துப்புரவு அலுவலர்கள், 365 சுகாதார ஆய்வாளர்கள், 95 ஆரம்ப சுகாதார பணியாளர்கள், 3,332 சுகாதார பணியாளர்கள், 21,137 துப்புரவு பணியாளர்கள் என 35 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களோடு இனைந்து பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து வரவழைக்கப்பட்ட 280 துப்புரவு ஆய்வாளர்கள் , 9,697 துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குப்பைகள் அகற்றும் பணியோடு சேர்த்து பிளீச்சிங் பவுடர் போடும் பணி, குடிநீரில் குளோரின் கலக்கும் பணி, வீடுகளுக்கு பிளீச்சிங் பவுடர் வழங்கும் பணி உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சி துரிதமாக மேற்கொண்டு வருகிறது, என குறிப்பிடப் பட்டுள்ளது.