நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே குளம் உடைந்து 650 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
செங்கோட்டை அருகே குளம் உடைந்து 650 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
செங்கோட்டை: செங்கோட்டை அருகே குளம் உடைந்து 650 ஏக்கர் விவசாய நிலத்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் அவை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த முன்று தினங்களாக ஓகி புயல் தாக்கம் காரணமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கம் நிறைந்து அந்த உபரி தண்ணீர் காட்டாற்று தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. இதனால் பல ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட குளங்கள் பெரும்பாலனவை நிரம்பியது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி - செங்கோட்டை சாலையில் அமைந்துள்ள கொட்டா குளம் கிராமத்தில் கொட்டாகுளம் கீழ குளம் உள்ளது. இந்த குளம் கடந்த சில ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தது. தற்போது பெய்த கன மழை காரணமாக இந்த குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்து குளம் நேற்று முன் தினம் நிரம்பியது.
மேலும் குளத்தின் நடுமடை ஏற்கனவே ரூ.5 லட்சம் செலவில் பராமரிப்பு செய்ய நிதி ஓதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் இருந்ததால் இந்த பணியை செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் நீர் வரத்து அதிகமாக வரவே நடு மடை உடைந்தது.
இதனால் குளத்தில் உள்ள நீர் சீறிப்பாய்ந்து சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் நாற்றுகள் நட்டு சுமார் 20 நாட்களே ஆன நிலையில் பயிர்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.