கிராமங்களில் வசிக்கும் 67 கோடி பேரின் ஒருநாள் வருவாய் ரூ.33 தான்!
சென்னை: இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் 67 கோடி பேர் தினமும் 33 ரூபாய் வருவாயில் வாழ்க்கை நடத்துவது சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பு 2011ன் விவரங்களின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் 75 சதவீதம் பேரின் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்தை விட குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 69 சதவீதம் பேர் அதாவது 83.3 கோடி மக்கள் கிராமப்புறங்களில் வசித்து வருகிறார்கள்.
5 கோடி இந்திய மக்களிடம் செல்போனோ அல்லது வேறு வகையான தொலைதொடர்பு சாதனமோ இல்லை.
கிராமப்புறங்கள்
கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி மிகவும் மெதுவாக இருப்பதால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் முடங்கும் அபாயம் உள்ளது என்று மூடிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் 75 சதவீதம் பேர் அதாவது 13 கோடியே 35 லட்சம் பேரின் மாத வருவாய் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
ஏழைகள்
கிராமப்புறங்களில் உள்ள 4ல் 3 வீடுகளில் மாத வருவாய் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. 90 சதவீத வீடுகளில் மாத வருவாய் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார். அர்ஜுன் சென்குப்தா கமிட்டி அளித்த அறிக்கையின்படி இந்திய மக்கள்தொகையில் 77 சதவீதம் பேர் ஏழைகள் ஆவர்.
ரூ.33 வருவாய்
கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிப்போரில் 67 கோடி பேர் தினமும் ரூ.33 வருவாயில் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
செல்போன்கள்
கிராமப்புறங்களில் வசிப்போரில் 71 சதவீதம் பேரிடம் செல்போன்கள், 11 சதவீதம் பேரிடம் குளிர்சாதனப் பெட்டிகள், 21 சதவீதம் பேரிடம் இருசக்கர அல்லது மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன.
வீடு
கிராமப்புறக்களில் 2 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 330 பேரின் வீடுகள் மூங்கில், குடிசை வீடுகள் ஆகும். 10 லட்சத்து 86 ஆயிரத்து 543 பேரின் வீடுகள் பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் கவர்களால் ஆனது. 65 லட்சத்து 27 ஆயிரத்து 690 பேரின் வீடுகள் தான் கான்கிரீட் வீடுகள் ஆகும்.
கல்வி
இந்தோனேசிய மக்கள்தொகையை விட அதிகமான இந்திய மக்கள் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். கிராமப்புறங்களில் வசிப்போரில் 74 சதவீதம் பேரின் மாத வருவாய் ரூ. 5 ஆயிரத்தை விட குறைவாக இருக்கையில் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது இல்லை.