67 வது குடியரசு தினம்... தலைநகர் டெல்லியில் கோலாகலம்.. இந்த ஆண்டு ஸ்பெஷல் என்ன?
சென்னை: நாட்டின் 67வது குடியரசு தினவிழா தலைநகர் டெல்லியில் கோலாகலத்துடன் இன்று நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்புக்கிடையே நடைபெறும் இந்தக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் பங்கேற்கிறார்.
குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக, டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் இதில் நடைபெற உள்ளன.
முதல் முறையாக வெளிநாட்டு ராணுவம்
குடியரசு நாடாக இந்தியா அறிவிக்கப்பட்ட கடந்த 67 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டு ராணுவம் இந்த குடியரசு தின விழாவில்தான் பங்கேற்கவிருக்கிறது. இன்று நடக்கும் விழாவில் ப்ரெஞ்ச் ராணுவத்தின் ஒரு பகுதி பங்கேற்கிறது.
26 ஆண்டுகளுக்குப் பிறகு
இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் இன்னொரு ஸ்பெஷல் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ நாய்களின் அணிவகுப்பி இடம்பெறுகிறது. லாப்ரடார் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த 36 நாய்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நேரத்தைச் சுருக்கி
வழக்கமாக குடியரசு தினவிழா 115 நிமிடங்கள் நடைபெறும். இந்த ஆண்டு அந்த கால அளவு 90 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 25 நிமிடங்கள் குறைவு.
பெண் வீராங்கனைகள்
இந்த குடியரசு தின விழாவின் முதல் முறையாக சிஆர்பிஎப்பின் பெண் வீராங்கனைகள் பல்வேறு சாகசக் காட்சிகளை அரங்கேற்றவிருக்கின்றனர். இதற்காக 126 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குடைகள் ரெடிப்பா
கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவர் மனைவி மிஷேல் பங்கேற்றனர். அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பிக்க, ஒபாமா தம்பதிகள் தங்களுக்குத் தாங்களே குடைப் பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்த முறை அந்த சங்கடத்தைத் தவிர்க்க குடைகளுடன் ராணுவ வீரர் குழு தயாராக உள்ளது!