மசினகுடி விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலி.. இருவர் உயிருடன் மீட்பு!
Recommended Video
ஊட்டி: சென்னையிலிருந்து நீலகிரி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரில் இருவர் உயிருடன் உள்ளதாகவும் மீதமுள்ள 5 பேர் பலியாகிவிட்டதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான வனப்பகுதியாக மசினகுடி கருதப்படுகிறது. இங்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும் ஒரு வனப்பகுதியாகும்.
இங்கு வனத்துறையினரின் அனுமதியில்லாமல் சுற்றுலா பயணிகள் நுழைய கூடாது. எனினும் வெளியூர்களில் இருந்து இயற்கை அழகை ரசிப்பதற்காகவே அதன் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் வந்து விபத்திலும் விலங்குகளின் தாக்குதலிலும் பலியாகிவிடுகின்றனர்.
இதுபோல்தான் சென்னையைச் சேர்ந்தவர்கள் ராமஜோஸ், ரவிவர்மா, இப்ராஹிம், ஜெயக்குமார், அருண், அகர்வால், ஜூடி. நண்பர்களான இவர்கள் 7 பேரும் இந்த வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
சிக்னல் கிடைக்கவில்லை
இந்த 7 பேரும் நேற்று காலை சென்ற இவர்கள் இதுவரை வனத்தை விட்டு வெளியே வரவில்லை.இவர்களது தொலைபேசி இணைப்பும் கிடைக்காமலும் ஆங்காங்கே விட்டு விட்டு சிக்னல் கிடைத்தும் இருந்தது.
போலீஸாருக்கு தகவல்
இதனால் குடும்பத்தார் பரபரப்பானார்கள். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதைத் தொடர்ந்தே தேடுதல் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
பள்ளத்துக்கு சென்றனர்
அப்போது கல்லடை மலை பகுதியில் 32-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே 7 பேரும் சென்ற இன்னோவா கார் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து மீட்பு குழுவினர் அந்த கார் விழுந்த பள்ளத்துக்கு சென்றனர்.
5 பேர் பலி
அப்போது காருக்கு அருகில் பலத்த காயங்களுடன் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 5 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த விபத்து கடந்த 1-ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.