தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு; சம்பளம் உயரும்: முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு
முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றபின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குறிவைத்து முக்கிய அறிவிப்பினை விடுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், இன்னமும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடுதான் ஆட்சி செய்து வருகிறார்.
அவரது அறிக்கைகள் கூட அம்மா புகழ் பாடுகிறது. அகவிலைப்படி உயர்வு பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும்,ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
புரட்சித்தலைவி அம்மா
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஆட்சி புரிந்து வரும் தமிழக அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு சதவிகிதம் உயர்த்தியுள்ளது.
அனைவருக்கும் அகவிலைப்படி
உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி பெறும் அனைவருக்கும் இந்த உயர்வு பொருந்தும்.
7 சதவிகித அகவிலைப்படி
இந்த ஏழு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு என்பது ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.
18 லட்சம் பேர் பயன்
அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன் அடைவார்கள்.
ரூ.1558.97 கோடி
இந்த உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,558.97 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நிலுவைத் தொகை
முதல்வரின் இந்த உத்தரவினை அடுத்து ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பருக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை உடனடியாக ரொக்கமாக வழங்கப்படும் என தெரிகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் குறிவைத்து மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.