7 நகரங்களில் 7 நாட்கள் பொதுமக்களுடன் அன்புமணி கலந்துரையாடல்... தமிழக வளர்ச்சி குறித்து!
சென்னை: தமிழக வளர்ச்சி குறித்து 7 நாட்கள், 7 நகரங்களில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த 7 நாள் கலந்துரையாடலை கையில் எடுத்துள்ளார் டாக்டர் அன்புமணி.
இதுதொடர்பாக பாமக விடுத்துள்ள அறிக்கை:
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு
பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு நகரங்களில் அவர் ஆற்றிய உரைகள், நடத்திய போராட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. அரசால் தான் முடியும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
வண்டலூர் மாநாடு
வண்டலூரில் கடந்த 27.02.2016 அன்று நடைபெற்ற 2016 ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு, கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு, சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் ஆகிய 7 தலைப்புகளில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவை குறித்து ஒளிப்பட விளக்கத்துடன் அவர் ஆற்றிய உரை அவர் மீதான நம்பிக்கையை மக்களிடம் அதிகரித்திருக்கிறது.
முற்றிலும மாறுபட்ட கலாச்சாரம்
மாநாடு என்றால் எதிர்க்கட்சிகளை வசைபாடுவது தான் என்ற தமிழக அரசியல் கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு மக்கள் பிரச்சினைகளை பட்டியலிட்டு, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும் அன்புமணி ராமதாஸால்தான் தமிழகத்தில் மாற்றமும், முன்னேற்றமும் சாத்தியமாகும் என்ற எண்ணம் அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வளர்ச்சி பற்றி அன்புமணி
அதன் தொடர்ச்சியாக மக்கள் வளர்ச்சி பற்றி அன்புமணி என்ற பெருந்தலைப்பில் 7 நாட்களுக்கு 7 நகரங்களில், 7 தலைப்புகளில் அன்புமணி ராமதாஸ் உரையாற்ற உள்ளார்.
இன்று வேலூர்
முதல் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை வேலூர் ஊரிசு கல்லூரி காப் அரங்கத்தில் சுகாதாரம் குறித்து அன்புமணி என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். 11.03.2016 வெள்ளிக்கிழமை சேலம் தெய்வீகம் திருமண அரங்கத்தில் ‘மது ஒழிப்புக் குறித்து அன்புமணி' என்ற தலைப்பிலும், 12.03.2016 சனிக்கிழமை கோவை கமலம் துரைசாமி அரங்கத்தில் ‘தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அன்புமணி' என்ற தலைப்பிலும் அன்புமணி உரையாற்றுகிறார்.
வேளாண் புரட்சி
‘வேளாண் புரட்சி குறித்து அன்புமணி' என்ற தலைப்பில் திருச்சி திருவானைக்காவல் ஏ.கே.மகாலில் 13.03.2016 ஞாயிற்றுக்கிழமையும், ‘ஊழல் ஒழிப்பு குறித்து அன்புமணி' என்ற தலைப்பில் மதுரை பிரண்ட்ஸ் மகாலில் 14.03.2016 திங்கட்கிழமையும், ‘தரமான கல்வி குறித்து அன்புமணி' என்ற தலைப்பில் நெல்லை ஆரியாஸ் அபினயா மகாலில் 15.03.2016 செவ்வாய்க் கிழமையும் அன்புமனி உரையாற்றுகிறார்.
சென்னையில் நிறைவு
நிறைவாக 16.03.2016 புதன்கிழமை சென்னை அண்ணா அரங்கத்தில் ‘சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் குறித்து அன்புமணி' என்ற தலைப்பில் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றவுள்ளார்.
மாலை 6 முதல் 8 வரை
அன்புமணி ராமதாஸின் இந்த நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு ஒவ்வொரு நாளும் சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணி வரை நடைபெறும். முதல் ஒரு மணி நேரத்திற்கு இந்த தலைப்புகளில் அன்புமணி உரையாற்றுவார். அடுத்த ஒரு மணி நேரம் இந்த பிரச்சினைகள் குறித்து மக்கள் எழுப்பும் வினாக்கள் மற்றும் ஐயங்களுக்கு அவர் விடையளிப்பார். இந்த நிகழ்ச்சிகளில் சமூக அக்கறையுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மக்களும் இணையலாம்
இதன்மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் துறைகள் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் எவ்வாறு திட்டமிட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றை சரி செய்து தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான செயல்திட்டங்கள் என்ன? என்பதை அறியலாம். தமிழகத்தை முன்னேற்றுவதற்கான பயணத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.