பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீனுக்கு 7 நாள் போலீஸ் காவல்!
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, அத்வானி செல்லும் பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீனை தமிழக போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மயில் ஆகியோரை கைது செய்தனர்.தொடர் விசாரணையில் பரமக்குடியில் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் முருகனை தாங்கள்தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, வேலூர் சிறையில் இருந்து வந்த போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை பரமக்குடி போலீஸார் திங்களன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, பக்ருதீனும், பிலால் மாலிக்கும் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை பார்த்து, ‘உங்களிடம் நிறைய பேச வேண்டும்' என சொன்னவாரே நீதிமன்றத்திற்குள் சென்றார்.
ராமநாதபுரம் நீதிதுறை நடுவர் நீதிமன்றம் எண்-2ன் நீதிபதி வேலுச்சாமி முன், சி.பி.சி.ஐ.டி போலீஸார் இவர்களை ஆஜர்படுத்தினர். அப்போது, போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் இருவரிடமும் முருகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த 10 நாள் போலீஸ் காவல் கேட்கப்பட்டது.
ஆனால், 7 நாள் மட்டுமே போலீஸ் விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி, குற்றவாளிகள் இருவரையும் டிசம்பர் 2 ஆம் தேதி மீண்டும் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும், விசாரணையின்போது குற்றவாளிகளை சந்திக்க அவர்களது வழக்கறிஞர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் அனுமதி அளித்தும், இருவருக்கும் போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.