காதலியை அபகரித்தான்... போட்டுத் தள்ளினேன்: கைதான கூலிப்படைத் தலைவன் வாக்குமூலம்
சென்னை: தன்னுடைய காதலியை தட்டிப்பறித்த காரணத்தால் கூலிப்படை துணையுடன் வெட்டிக் கொலை செய்ததாக ரவுடி செந்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கூலிப்படைத் தலைவன் ஜான்சன், போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
எழும்பூர், வேனல்ஸ் சாலையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டர் அருகே திங்கட்கிழமையன்று பொதுமக்கள் முன்னிலையில் டி.வி செந்திலை, ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொன்றது.
கொலை செய்யப்பட்ட செந்தில் ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை வழக்கு உள்பட 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறைக்குசென்ற இவர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆனார்.
முகமூடி கும்பல்
இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது நண்பர்களை பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில், எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் எதிரில் உள்ள பொன்னியம்மன் கோவில் சாலை சந்திப்பில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 7 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் செந்திலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் தப்பி ஓடி விட்டனர்.
பழிக்குப் பழியா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஏழுமலை என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் செந்தில் முக்கிய குற்றவாளி ஆவார். ஏழுமலை கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக, செந்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில் பிரபல கூலிப்படை தலைவன் ஜான்சனும், அவரது ஆதரவாளர்களும்தான் செந்திலை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது.
7 பேர் கைது
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு மற்றும் எழும்பூர் போலீசார், செங்குன்றத்தை சேர்ந்த ரவுடி ஜான்சன், 26 சைதாப்பேட்டையை சேர்ந்த பாபு, 25, ரமேஷ், 27, சதீஷ், 27, வடபழனியை சேர்ந்த சரத்குமார், 22, ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த அருண்குமார், 25, திருவள்ளூரை சேர்ந்த சந்துரு, 30, ஆகியோரை செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்கு மூலம்
செந்திலை கொலை செய்தது ஏன்? என்று கூலிப்படை தலைவன் ஜான்சன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தனது காதலியை, செந்தில் அபகரித்துக்கொண்டார். இந்த காதல் போட்டியில் எனக்கும், அவருக்கும் ஏற்கனவே பகை இருந்தது. புழல் சிறையில் நாங்கள் இருவரும் அடைக்கப்பட்டிருந்தபோதும், எங்களுக்குள் மோதல் வெளிப்படையாக வெடித்தது. பலமுறை அடி-தடியில் ஈடுபட்டோம்.
சபதம் போட்ட செந்தில்
விடுதலையாகி வந்தவுடன் என்னை கொலை செய்வேன் என்று செந்தில் சிறையில் சபதம் போட்டார். மேலும் கர்ப்பிணியாக உள்ள எனது தங்கையையும் கொல்ல போவதாக மிரட்டினார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர், ஜாமினில் வெளியே வந்தார். நானும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துவிட்டேன். அதை அறிந்த, செந்தில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது நண்பர்களை சந்தித்து, என்னை தீர்த்துக்கட்ட சதிதிட்டம் தீட்டினார்.
நான் முந்திக்கொண்டேன்
இதற்காக அவர் கடந்த சில நாட்களாக சிந்தாதிரிப்பேட்டைக்கு தினமும் வந்து தனது பழைய கூட்டாளிகளை சந்தித்து பேசுகிறார் என்ற தகவலும் எனக்கு வந்தது. இதனால் அவர் என்னை தீர்த்துக்கட்டுவதற்குள், நான் முந்திக்கொண்டு அவரை கொலை செய்துவிட்டேன். மற்றவர்கள் தொழிலுக்கு புதியவர்கள். போலீசாரிடம் சிக்காமல் இருக்க வேறு மாவட்டங்களுக்கு தப்பி செல்ல முயன்றோம். அதற்குள் சிக்கி கொண்டோம் என்று ஜான்சன் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.