படிக்கட்டு பயணத்தால் வந்த வினை... பேருந்தில் இருந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்த 7 மாத குழந்தை!
மதுரை: மதுரை அருகே ஓடும் பேருந்தில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த பெற்றோரின் கையில் இருந்து தவறி சாலையில் விழுந்த 7 மாத குழந்தையை வேன் டிரைவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றியுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து மதுரை வந்த பேருந்தில் 7 மாத குழந்தையுடன் பெற்றோர் பயணம் செய்தனர். ஆனால் அந்த பேருந்தில் உட்கார இடம் இல்லாத நிலையில் படிக்கட்டில் அமர்ந்து வந்துள்ளனர்.
அப்படியே கைக்குழந்தையை கையில் வைத்தபடி இருவரும் அசந்து தூங்கி தூங்கி இருக்கின்றனர். அப்போது பெற்றோரின் கையில் இருந்து குழந்தை கீழே விழுந்துள்ளது. இதனை பெற்றோர் கவனிக்கவில்லை.
ஆனால் அந்த குழந்தை சாலையில் விழுந்ததை அந்த வழியே செல்லும்பொழுது வேன் ஓட்டுநர் ஒருவர் பார்த்து உடனடியாக அதனை சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு குழந்தையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி போலீசிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வச்சகாரம்பட்டி என்ற இடத்தில் தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்த பெற்றோர் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக பேருந்தில் இருந்து அப்பகுதியில் போலீசாரிடம் தெரிவித்திருக்கின்றனர். அப்போதுதான் குழந்தை மருத்துவமனையில் உள்ள விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
படிக்கட்டு பயணம் ஆபத்தானதே!