பீதியை கிளப்பும் டெங்கு.. இன்று மட்டும் இதுவரை 7 பேர் பலி
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தமிழகத்தில் இன்று இதுவரை மட்டும் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை: டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தமிழகத்தில் இன்று இதுவரை மட்டும் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இதுவரை காய்ச்சலின் தாக்கமும் உயிரிழப்பும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் இன்று மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். சேலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 12ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காய்ச்சல் காரணமாக நாமக்கல் பாப்பாத்தி காடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதேபோல் நாமக்கல் புதுக்கோம்பையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பிரவீன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ராமாநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஜமால் முகைதீன் என்ற 58 வயது நபர் காய்ச்சலால் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ப்ரீத்தி என்ற எம்பிஏ பட்டதாரி காய்ச்சலால் பலியானார்.
இதேபோல் மதுரை மாவட்டம் தேனூரைச் சேரந்த முனியாண்டி என்பவர் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் முனியம்மா என்பவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.