பள்ளி சென்று மாயமான 2-ம் வகுப்பு மாணவன் கழிவு நீர் தொட்டியில் சடலமாக மீட்பு!
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவர் கழிவு நீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நேரு(35). இவரது மகன் பிரதீப்குமார்(7) அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே, நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்ற பிரதீப்குமார், மாலை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் பிரதீப் குமாரை தேடி அலைந்துள்ளனர். ஆனால், பிரதீப் குமாரை எங்கும் காணவில்லை.
இந்நிலையில், நேற்று காலையில் பிரதீப்குமாரின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள கட்டடம் அருகே தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அங்குள்ள கழிவு நீர் தொட்டியில் பார்த்த போது பிரதீப்குமார் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.