நெல்லை அருகே சிறுமியை கடத்த முயன்றவருக்கு தர்மஅடி: காவல்நிலையம் முற்றுகை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.
Recommended Video
நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். ஆனால் இதுகுறித்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை அருகே உள்ள மேலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் ஓட்டுநராக உள்ளார். இவர் தனது 7 வயது மகள் மற்றும் குடும்பத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்ததார். அதிகாலை அவரது வீட்டிற்குள் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியின் வாயை பொத்தி வெளியே தூக்கி சென்றார்.
ஊருக்கு வெளிப்புறமான சுடுகாட்டு பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட முயன்றபோது, சிறுமி கதறி அழுதார். சிறுமியின் அழுகை சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். ஆட்களை கண்டதும், அந்த நபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் விரட்டி சென்ற பொதுமக்கள் அங்கேயே அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்க தொடங்கிவிட்டனர்.
அப்போது அவரது பெயர் ஜஸ்டின் என்பதும், பாளையங்கோட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை மேலாப்பாளையம் காவல்துறையிடம் பொதுமக்களே ஒப்படைத்தனர். சிறுமியை காவல் துறையினர் மருத்துவப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் குற்றவாளியை ஒப்படைத்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போஸ்கோ சட்டத்தில் ஜஸ்டினை கைது செய்ய வேண்டும் என்றும், அப்பகுதி மக்களும், சிறுமியின் உறவினர்களும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.