ஈரோட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்ம மரணம்.. காயங்களுடன் சடலம் மீட்பு!
விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ஈரோடு: குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவரது மகள் 7 வயது சிறுமி.
நேற்று வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று மாயமானார். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடினர். சுமார் இரண்டு மணிநேர தேடுதலுக்கு பின்னர் வீட்டின் அருகேயுள்ள சிதலமடைந்த கட்டிடத்தில் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதனையடுத்து பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறுமியின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர். உடலில் காயங்களுடன் சடலமாக விளையாட சென்ற சிறுமி மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.