கிருஷ்ணகிரி கல் குவாரியில் வெடித்துச் சிதறிய டெட்டனேட்டர்- 7 வயது சிறுவன் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கிரானைட் கற்களைப் பெயர்க்க கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடி வெடித்துச் சிதறி விழுந்ததில் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வெண்ணங்கூர் பகுதியில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கும் கல் குவாரி உள்ளது. நேற்று இரவு கற்களை வெட்டி எடுக்க குவாரியில் வெடி வைத்துள்ளனர். அப்போது ஒரு வெடி பொருள் பறந்து வந்து வெண்ணங்கூர் கிராம பகுதியில் சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்த இடத்தில் விழுந்துள்ளது.
அப்போது காதர் என்பவரின் 7 வயதான மகன் ஷாகித் அந்த குச்சியை எடுத்து பார்த்துள்ளான். திடீரென அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பலத்த காயமடைந்த ஷாகித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபற்றி அறிந்ததும் அக்கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவனின் உடலை பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் இன்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து ஷாகித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுவன் ஷாகித் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் கையில் வெடித்தது டெட்டனேட்டராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருவதுடன், குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.