பணம் எடுக்க வங்கிக்கு வந்த விவசாயி திடீர் மரணம்... சடலத்துடன் கதறி அழும் மனைவி... வைரலாகும் வீடியோ!
தஞ்சை அருகே பணம் எடுக்க வந்த விவசாயி வங்கியிலேயே உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
தஞ்சை: தஞ்சை அருகே வங்கியில் பணம் எடுக்கச் சென்ற விவசாயி, மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (70). இவருக்கு பாபநாசம் உழவர் சந்தை அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது.
மத்திய அரசின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நாட்டில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. எனவே, வங்கிகளில் பணம் எடுப்பது மட்டுமே மக்களின் ஒரே தீர்வாக உள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.
இந்நிலையில், தனது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சுப்பிரமணியனும், தனது மனைவி தையல்நாயகி (60)யுடன் வங்கிக்குச் சென்றுள்ளார். ரூ. 4 ஆயிரம் பணத்தை எடுப்பதற்காக வரிசையில் நின்ற சுப்பிரமணியனுக்கு திடீர் நெஞ்சுவலியும், அதனைத் தொடர்ந்து மயக்கமும் ஏற்பட்டது. இதனால், சுப்பிரமணியனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிலரால் செல்போனில் படமாக்கப்பட்டுள்ளது. கணவர் உடலை பார்த்து தையல்நாயகி கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
ஒருபுறம் தனியாக தையல்நாயகி இறந்த தனது கணவர் உடலுடன் அழுது கொண்டிருக்க, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீண்டும் தங்களது கடமையில் ஈடுபடத் தொடங்கிவிட்டது போன்று அந்த வீடியோ காட்சிகள் உள்ளன. இது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
பணம் எடுக்க வரிசையில் நின்ற விவசாயி வங்கியிலேயே மயங்கி விழுந்து இறந்தது ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தி இருக்க, மற்றொருபுறமோ மனிதநேயத்தை மறந்து மற்றவர்கள் செயல்படும் நிலைக்கு தற்போது நம் நாட்டின் நிலைமை உள்ளதே என இந்த வீடியோ வேதனை தருவதாக சமூகவலைதளங்களில் மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.