நல்லொழுக்கம் கல்வியில் உயர்வு தரும்.. தேவகோட்டை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்தவர்களை மாணவர் ரஞ்சித் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராம .ஆதிரெத்தினம் (ஓய்வு ) தேசிய கோடியை ஏற்றி வைத்து மாணவர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில், நல்ல ஒழுக்கம்தான் உங்களுக்கு நல்ல கல்வியை தரும்.நீங்கள் வாழ்க்கையில் எந்த உயிரையும் கொள்ள கூடாது,பொய் சொல்ல கூடாது, திருடக் கூடாது என விதிகளை வகுத்து கொண்டு அதனை கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றிகளை பெற முடியும். மகாத்மா காந்தி பொய் சொல்ல கூடாது என்பதை வேத வாக்காக எடுத்து கொண்டு அதன் வாயிலாக சுதந்திரத்துக்கு வித்திட்டார்.
நம்மை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.நேரத்தையும், காலத்தையும் நம் நமது துணையாக கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். தனி மரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால் தனிமரம் தோப்பாகும். எப்போது என்றால் அதனை சரியான முறையில் வைத்து பராமரித்தால் தோப்பில் உள்ள தனி, தனி மரமும் தோப்பாக காட்சி அளிக்கும். அது போல் நீங்கள் அனைவரும் தனித், தனியாக நல்ல முறையில் செயல்பட்டால் அவை அனைத்தும் கூட்டு முயற்சியாகி நல்ல வெற்றியை உங்கள் பள்ளிக்கு கொடுக்கும் என்றார்.
விழாவின் தொடக்கமாக திருக்குறள் நாட்டியம் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் முத்தையன், ஆகாஷ், சந்தோஷ், திவ்யஸ்ரீ, ஜெயஸ்ரீ, சந்தியா, அனுசுயா ஆகியோர் காந்தியடிகள் பற்றி பாடலும், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பில் வெங்கட்ராமனும், காந்தியின் மணிமொழிகள் தொடர்பாக கீர்த்தியாவும் , கலாமின் கனவுகள் என்ற தலைப்பில் அஜய் பிரகாஷும், மண்ணின் மகுடங்கள் என்ற தலைப்பில் பாடல்களாக காயத்ரி, மாதரசி, சந்தியா, பாக்கியலெட்சுமி , நித்திய கல்யாணி ஆகியோரும் பேசினர்.
இந்திய தாய்க்கு ஒரு கடிதம் என்கிற தலைப்பிலான கவிதையை ஜெனிபரும், சுதந்திர தினம் தொடர்பாக ஆங்கில உரையை தனலெட்சுமியும், தேசப்பெருமை என்கிற தலைப்பிலான பாடலை அல்நிஸ்மா, பார்கவி லலிதா, சின்னம்மாள் ஆகியோரும் பாடினார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்து இருந்தார். விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிறைவாக மாணவி ராஜி நன்றி கூறினார்.