சேலம் 720 பவுன் கொள்ளையில் துலங்கியது துப்பு
சேலம் அருகே பெண் இரும்பு வியாபாரியின் வீட்டில் 720 பவுன் கொள்ளை நடந்த சம்பவத்தில் குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்கியுள்ளது.
சேலம் : கிச்சிப்பாளையம் அருகே இரும்பு வியாபாரியின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது யார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார் தொழிலதிபர் விஜயலட்சுமி. அவரின் கணவர் உயிரிழந்து விட்டதால் தனது சகோதரர் பாஸ்கருடன் இணைந்து வியாபாரத்தை கவனித்து வருகிறார் விஜயலட்சுமி. கிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் திருப்பதி சென்று விட்டு இன்று அதிகாலை சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது தனது வீட்டில் இருந்த பீரோ சாவி போட்டு அதில் இருந்த 720 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததோடு கொள்ளைகும்பல் போலீசாரிடம் புகார் அளிக்கக் கூடாது என்று மிரட்டும் கடிதத்தோடு பில்லி சூனியம் வைத்துவிட்டு சென்றிருந்தனர். மேலும் கொள்ளைக் கும்பல் விஜயலட்சுமி வீட்டில் இருந்த சிசிடிவி காமிரா ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச்சென்றுவிட்டனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து விஜயலட்சுமி கிச்சிப்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் வகையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளை குறித்து நேரில் ஆய்வு செய்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
கொள்ளையில் வெளிநபர்கள் யாருக்கும் தொடர்பு இருக்காது என்பதால், விஜயலட்சுமியின் சகோதரர் பாஸ்கர் மற்றும் ஜோதிடர் சுப்ரமணி என்பவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விஜயலட்சுமி கடையில் பணியாற்றும் 9 பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையில் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்று இரவுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.