ஸ்ரீரங்கத்தில் 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் பார்வையாளர்
ஸ்ரீரங்கம்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் உள்ள 79 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று தேர்தல் பொதுப் பார்வையாளர் பால்கார் சிங் கூறியுள்ளார்.
காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அரசியல்கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) வினோத் குமார், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி, மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேசுவரி, மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் உள்ளிட்டோரும், அதிமுக சார்பில் ஜெ.சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், திமுக சார்பில் மு.அன்பழகன், முத்துச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில் பால்கர் சிங் பேசியதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவின உச்ச வரம்பு ரூ.28 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் செலவினங்கள் அனைத்தையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
வாக்குப்பதிவிற்கு முன்னர் குறைந்தது 3 முறையாவது வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்குகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் முழுமையான கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்திட வேண்டும்.
பிரசாரத்தின்போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும், மதம் மற்றும் ஜாதி ரீதியில் வாக்கு சேகரிக்கக்கூடாது. 41 பகுதிகளில் 79 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மேலும் இருந்தால், அது குறித்த தகவல் அரசியல் கட்சிகள் அளிக்கலாம். அந்த இடங்களில் கூடுதல் கண்காணிப்பு வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் தனியார் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்திருந்தால் அதற்குரிய அனுமதி கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பால்கார்சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications