சஸ்பெண்ட் முடிந்தது.. 1 வாரத்திற்குப் பிறகு சட்டசபை வந்த 79 தி.மு.க. உறுப்பினர்கள்.. மீண்டும் அனல்?
சென்னை: அவைக்கு குந்தகம் விளைவித்தாக கூறி ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எம்.ஏக்களின் சஸ்பெண்ட் நேற்றுடன் முடிவடைந்த அடுத்து 79 திமுக உறுப்பினர்கள் இன்று சட்டசபைக்கு அடி எடுத்து வைத்துள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்படாத நிலையிலும் அவையை புறக்கணித்த 10 திமுக எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் இன்று அவைக்கு வந்துள்ளனர்.
ஒருவார காலம் எதிர்கட்சியினர் இல்லாமல் விவாதம் நடத்திய ஆளுங்கட்சியினர் இன்று முதல் மீண்டும் சட்டசபையில் கார சார விவாதங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழக சட்டசபையில் கடந்த 17ம் தேதி நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.குணசேகரன், நமக்கு நாமே பயணம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாக கருத்து ஒன்றை தெரிவித்தார். மு.க. ஸ்டாலின் தெரிவித்த அந்த கருத்தை சபாநாயகர் ப.தனபால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அவையில் இருந்த 79 தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டதுடன், ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி (திருவாரூர்), கே.என்.நேரு (திருச்சி மேற்கு), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), டாக்டர் பூங்கோதை (ஆலங்குளம்), ஐ.பெரியசாமி (ஆத்தூர்), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி), எம்.கே. மோகன் (அண்ணாநகர்), க.அன்பழகன் (கும்பகோணம்), ம.ராமச்சந்திரன் (ஒரத்தநாடு), கே.வி.சேகரன் (போளூர்) ஆகிய 10 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
தொடர்ந்து நடந்த 2 நாள் கூட்டத்தில், மற்ற தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டாலும், 79 தி.மு.க. உறுப்பினர்களின் சஸ்பெண்ட் பிரச்சினை குறித்து பேச முயற்சித்து வெளிநடப்பு செய்தனர்.
போட்டி சட்டசபை
அதே நேரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட 79 தி.மு.க. உறுப்பினர்கள் 18ம் தேதி தலைமைச் செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும், 19ம்தேதி போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தியும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால், தலைமைச் செயலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சட்டசபை புறக்கணிப்பு
கோட்டை வட்டாரத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி பலத்த பாதுகாப்பு போடப்பட்டதால் போலீஸ் மானியக்கோரிக்கை நடைபெற்ற ஆகஸ்ட் 22ம் தேதி முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்டாத 10 தி.மு.க. உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.
தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு
சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதுவும் திமுகவினருக்கு பின்னடைவாகவே இருந்தது.
ஜனநாயகம் படும் பாடு
சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் கூட்டங்கள் நடத்தினர் திமுகவினர். போட்டி சட்டசபை நடத்தியதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் ஸ்டாலின் கைதாகலாம் என்ற நிலையும் உருவானது.
சஸ்பெண்ட் முடிந்தது
இந்த நிலையில், 79 தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று முதல் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்துள்ளனர்.
அனல் பறக்கும்
இன்று நடைபெறும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இனி சட்டசபையில் மானியக்கோரிக்கை முடியும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.