அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி
சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தனது பெற்றோரை இழந்த சிறுமி மருத்துவமனையில் கதறி அழுததால் மருத்துவமனையே சோகத்தில் மூழ்கியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தில் நடுசூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோர் உயிரிழந்தனர்.
வெடி விபத்து
இருவரும் பட்டாசு தொழிற்சாலையில் நீண்ட காலமாக பணியாற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். இருவரும் தனித்தனி அறைகளில் வேலை செய்தனர். முதலில் வெடி விபத்து ஏற்பட்ட அறையில்தான் செல்வி பணியாற்றினாராம்.
பதற்றம்
வெடி வெடித்தவுடன் தனது மனைவி குறித்து பதற்றமடைந்த பாக்கியராஜ், மனைவி பணியாற்றிய அறைக்கு ஓடினார். அப்போது அந்த பகுதியில் இருந்த மற்றொரு அறை பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ், காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனிடையே செல்வியும் உடல் கருகி உயிருக்கு போராடினார்.
8 ஆண்டுகள்
இதையடுத்து பாக்கியராஜ் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்துதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தந்தை
அவர்களது ஒரே மகள் நந்தினி புதுசூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளயில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒரே நாளில் தனது தாய், தந்தையை இழந்த சிறுமி அங்கு கதறி அழுத காட்சிகள் அங்கிருந்தோரை கண்கலங்க செய்தது. அவரது உறவினர்கள் எவ்வளவோ தேற்ற முயற்சித்தும் சிறுமி கதறுவதை நிறுத்தவே இல்லை.
அம்மா
காலையில் வேலைக்கு சென்ற அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வரவேயில்லை என அந்த சிறுமி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியின் வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் அரசு உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.