தந்தி டி.வி மூலம் ஒளிபரப்பாகும் பிபிசி தமிழ் டிவிக்கு வாரந்தோறும் 82 லட்சம் நேயர்கள்!!
சென்னை: தந்தி டிவி மூலமாக ஒளிபரப்பாகும் பிபிசி தமிழ் டிவி செய்திகளை ஒவ்வொரு வாரமும் 82 லட்சம் நேயர்கள் பார்ப்பதாக பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச ஊடகமான பிபிசி நிறுவனத்தின் பிபிசி தமிழ் டிவி செய்திகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தின் தந்தி டிவி மூலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை தந்தி டிவியில் தமிழக நேரப்படி மாலை 7.30 மணிக்கு பிபிசியின் தமிழ்ச் செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் சங்கீதா ராஜன் இதை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் செய்திகள் இடம்பெறுகின்றன. கடந்த ஒரு ஆண்டில், பிபிசி தமிழ் நிகழ்ச்சி பிரிட்டிஷ் பொதுத்தேர்தல்களில் குறிப்பாக தமிழர்கள் உட்பட இனச்சிறுபான்மையினர் எப்படி வாக்களிக்க இருக்கிறார்கள் என்பதை ஒளிபரப்பியது.
இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பிபிசி தமிழ் அதன் செய்தியாளர்களை பயன்படுத்தி தேர்தல் கள நிலவரம் குறித்த ஒரு முழுமையான கண்ணோட்டத்தை வழங்கியது.
பிபிசி தமிழ் டிவி செய்திகளை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்ற ஒரு ஆய்வை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிபிசி நிறுவனம் நடத்தியது. இதில் ஒவ்வொரு வாரமும் சுமார் 82 லட்சம் பேர் பிபிசி தமிழ் டிவி ஒளிபரப்பை பார்ப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பிபிசி தமிழோசை ஆசிரியர் மணிவண்ணன் திருமலை கூறுகையில், மிகவும் துடிப்பான, போட்டி மிகுந்த தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி சந்தையில், பிபிசி தமிழ் பெற்றிருக்கும் இந்த குறிப்பிடத் தகுந்த வெற்றி, பிபிசியின் கடுமையான ஊடகவியல் தரத்துக்கு ஒப்ப அது கொடுத்துவரும் செய்திகளின் உயிர்ப்பான தரத்துக்கு சாட்சியமாக அமைகின்றது. சர்வதேச ஊடகங்களிலேயே தமிழ் நாட்டில் தமிழில் ஒரு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியைத் தந்த முதல் ஊடகம் பிபிசி தமிழ் என்ற வகையில், எங்களின் இந்த முதல் முயற்சிக்கு, தந்தி டி.வி நிறுவனம் மூலம், பார்வையாளர்கள் பலத்த அங்கீகாரத்தை வழங்கியிருப்பது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
தந்தி டி.வியின் தலைமை ஆசிரியர் ஆர்.ரங்கராஜ் பாண்டே கூறுகையில், பிபிசியுடன் நாங்கள் வைத்திருக்கும் மிக வெற்றிகரமான கூட்டுறவு எங்கள் நிறுவனப் பெயர்களுக்கு இருக்கும் பலத்தையும், எங்கள் ஊடகவியல் விழுமியங்களையும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம், பொழுதுபோக்கு போன்ற செய்திகளை நாங்கள் தரும் அதே நேரத்தில், தந்தி டிவியும், பிபிசி தமிழும், துல்லியமான மற்றும் பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளைத் தரும் என்ற பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை மேலும் மேலும் உயர்த்த கடுமையாகப் பணியாற்றும் என்றார்.