8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை கலெக்டராக பி. மகேஸ்வரி நியமனம்
சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளர் பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பி.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு இயக்குனர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஏ.ஞானசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை துணைச் செயலாளர் பிரஷாந்த் எம்.வத்நேர், திருவண்ணாமலை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளர் பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர்கள் கமிஷனர் எல்.சுப்பிரமணியன், விழுப்புரம் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். லால்குடி துணை கலெக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
கும்பகோணம் துணை கலெக்டர் மந்திரி கோவிந்த ராவ், சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி துணை கலெக்டர் எஸ்.கோபால சுந்தரராஜ், சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனராக (தெற்கு) நியமிக்கப்பட்டார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.