தீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு
Recommended Video
சென்னை: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக சென்னையில் இருந்து, நெல்லை, நாகர்கோவில், கோவை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாட்களான வெள்ளி , சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வார்கள்.
பல லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் காரணத்தால், ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது.காத்திருப்போர் பட்டியலும் கிட்டத்தட்ட பல ரயில்களில் 300ஐ தாண்டி உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆவடி-கூடுவாஞ்சேரி, சென்னை- மாமல்லபுரம் உள்பட 5 ரயில் திட்டங்களை கைவிட்ட ரயில்வே... அன்புமணி தகவல்
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை, நாகர்கோவில், கோவை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 8 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மொத்தமாக எத்தனை ரயில்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்னும் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளது என்றார்.