புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. 8 காவல் துறை அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வெளியான புகைப்படங்களை தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா அந்த சிறையிலிருந்து தலைமை வார்டன் மற்றும் வார்டன்கள் 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
ஒரு மாதத்துக்கு முன்னர்
இதைத் தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். பாகிஸ்தான் கைதியின் அறையில் இருந்த நட்சத்திர ஹோட்டல் உணவு வகைகள் ரம்ஜான் பண்டிக்கைக்காக சிறப்பு அனுமதி பெற்று வரழைக்கப்பட்டவை. இந்த புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
செல்போன் நடவடிக்கை
இதுகுறித்து அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில் சிறைச் சாலையில் முதல் வகுப்பினர் டிவி வைத்துக் கொள்ளலாம், விருப்பப்படி உடைகளை போட்டு கொள்ளலாம் என்றார். மேலும் சிறையில் செல்போன் பயன்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெரும் சர்ச்சை
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எச் ராஜாவும் போலீஸாரை புழல் சிறை விவகாரத்தை வைத்தே கேவலமாக பேசினார். இதையடுத்து புழல் சிறையில் உள்ள 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவு பிறப்பித்தார்.
எங்கு இடமாற்றம்
புழல் மத்திய சிறையின் முதன்மை தலைமை வார்டன்கள் விஜயராஜ் ஊட்டிக்கும், கணேசன் செங்கத்துக்கும், வார்டன்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் மத்திய சிறைக்கும், சுப்பிரமணி திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு மாற்றப்பட்டுள்ள இடத்தில் பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.