திருச்சியில் புதிதாக வாங்கிய வீட்டை பார்க்கப் போனபோது விபத்து.. 8 பேர் பலியான விபத்தின் சோகம்
திருச்சி: திருச்சியில் புதிதாக வாங்கிய வீட்டை பார்ப்பதற்காக சென்றபோது சென்னையிலிருந்து சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர்கள் திருச்சி முசிறி அருகே பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி பகுதியில் புதிதாக வீட்டை வாங்கியுள்ளனர். இந்த வீட்டில் அவ்வப்போது வந்து தங்கி செல்வதை இவர்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். அதனால் அந்த வீட்டை பார்ப்பதற்காக ஒரு பெரிய காரில் 13 பேர் திருச்சிக்கு நேற்று நள்ளிரவு புறப்பட்டனர்.
அப்போது சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நெல்லூரிலிருந்து விராலிமலைக்கு 20 டன் இரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை அதன் டிரைவர் நிறுத்திவிட்டு டீக்குடிக்க சென்றுள்ளார். அதிகாலை 4 மணிக்கு போதிய வெளிச்சம் இல்லை.
கார் நொறுங்கியது
இதனால் நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. லாரியில் 20 டன் எடை கொண்ட இரும்பு இருந்ததால் லாரி ஒரு இன்ச் கூட நகரவில்லை. எனினும் கார் சுக்குநூறாக நொறுங்கியது.
5 பேர் காயம்
இதில் அந்த காரில் பயணம் செய்த பாலமுருகன், சுப்பிரமணி, மனைவி ஜெயலட்சுமி, கோமதி, மஞ்சுநாதன், வசந்த லட்சுமி, சிறுவர்களான கந்தசாமி, நிவேதா உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகள்
திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடிக்கு அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி, லாரிகளை வழிமறித்து டிரைவர்களிடம் அபராதம் வசூலிப்பது வழக்கம். இதனால் அதிகாரிகளின் சோதனைகளுக்கு பயந்து சாலையோரம் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுகின்றன.
அடிக்கடி விபத்து
இது மட்டுமல்லாமல் தொலைவில் இருந்து வருவோர் திருச்சி அருகே வரும்போது பயண களைப்பு ஏற்படுவதால் சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுக்க நினைக்கிறார்கள். அப்படி அவர்கள் ஓய்வெடுக்கும் போது சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விடுவதால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோரிக்கை
மேலும் இந்த விபத்துக்கு போதிய வெளிச்சம் இல்லாமையும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. சுங்க சாவடியை சுற்றி 2 கி.மீ .தூரத்துக்கு நன்கு வெளிச்சம் அளிக்கக் கூடிய விளக்குகளை பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தகவல் கொடுக்காமல் வந்த குடும்பத்தினர்
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில் எப்போதும் இவர்கள் பகலில் பயணம் செய்வது வழக்கம். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. இரவில் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு இந்த வீட்டுக்கு வந்து 10 நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்வது வழக்கம். வருவதற்கு முன்னர் எங்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டுதான் வருவர். ஆனால் இந்த முறை எந்த தகவலையும் அவர்கள் சொல்லவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.