ரத்தம் கக்கும் ஆடுகள்.. அடுத்தடுத்து 80 பலி.. என்ன நடக்கிறது களக்காட்டில்?!
80 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம் ஆந்த்ராக்ஸ் நோய் என கூறப்படுகிறது.
Recommended Video
நெல்லை: களக்காடு பகுதியில் மட்டும் 80 ஆடுகள் ரத்தம் கக்கி இறந்திருப்பது நெல்லை மாவட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
களக்காடு கீழப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர், சண்முகம். இவர் நீண்ட காலமாக ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். நிறைய ஆடுகளை சொந்தமாக வளர்த்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பண்ணை வைத்தே வளர்த்து வந்தவர்.
மர்மநோய்
ஆனால் கடந்த சில தினங்களாகவே சண்முகத்தின் ஆடுகள் ஒவ்வொன்றும் சோர்ந்து போய் காணப்பட்டன. இதனால் மர்ம நோய் தாக்கி இருக்கலாம் என்று நினைத்து சண்முகம் ஆடுகளுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனாலும் கடந்த திங்கட்கிழமை முதல் ஆடுகள் வரிசையாக மரணமடைய தொடங்கிவிட்டன. ஒவ்வொரு ஆடும் ரத்தம் கக்கியே இறந்திருக்கின்றன.
ரூ.5 லட்சம் இழப்பு
நேற்று ஒரே நாளில் மட்டும் சண்முகத்தின் 13 ஆடுகள் உயிரிழந்துள்ளன. கடைசியில் சொற்ப ஆடுகளே சண்முகத்திடம் தற்போது உள்ளது. ஒவ்வொரு ஆட்டின் விலையும் சுமார் 7 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய் வரை என்று கூறப்படுகிறது. அப்படியானால், கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை சண்முகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆந்த்ராக்ஸ் நோய்
ஆடுகள் இப்படி அடுத்தடுத்து உயிரிழக்க ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் ஆடுகளின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவ ரிப்போர்ட் வந்தபிறகுதான் எதையும் உறுதிபடுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
பீதியில் விவசாயிகள்
இந்நிலையில், ஆந்த்ராக்ஸ் நோய் முற்றிலும் பரவிடாமல் தடுக்க, களக்காடு பகுதியில் கால்நடை மருத்துவ குழுக்கள் நோய் தடுப்பு ஊசி, மருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. என்னதான் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவ துறை ஈடுபட தொடங்கினாலும், கால்நடைகளை வளர்த்துவரும் மக்கள் ஆந்த்ராக்ஸ் நோயை நினைத்து பெரும் கவலைக்கும், அச்சத்திற்கும் ஆளாகி நிற்கின்றனர்.