காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதற்குள் நிரம்பிய 92 ஏரிகள்.. இன்னும் மழை இருக்கே.. அச்சத்தில் மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி முத்தையா கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் பழைய மகாபலிபுரம் சாலை சுற்றுவட்டாரத்திலுள்ள காரனை ஏரி, தையூர் பெரிய ஏரி, சிறுதாவூர் ஏரி, கொண்டாங்கி ஏரி, மணமதி ஏரி உள்ளிட்ட 912 ஏரிகள் உள்ளன. தொடர்மழையால் முக்கியமான 200 ஏரிகளில் 80 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளன.
இதே போன்று விவசாய பாசனத்திற்கு பயன்படும் 98 ஏரிகள் நிரம்பியதாக பொதுப்பணித்துறை அதிகாரி முத்தையா தெரிவித்துள்ளார். மற்ற ஏரிகளும் தொடர்ந்து நிரம்பி வருவதால் ஏரி பலமின்றி ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். எனினும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஏரிகளில் இருந்து நீர் வெளியேறாமல் இருக்க மணல் மூட்டைகள் போட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரி கூறியுள்ளார்.