நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் எடப்பாடிக்கு எதிராக 150 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர்: ஸ்டாலின்
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் எடப்பாடிக்கு எதிராக 150 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்செங்கோடு: சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 150 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
தர்ம யுத்தம் நடத்துவதாக கூறிய ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி தர்மமாக கிடைத்திருக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சேர்த்து வைத்த ஆளுநரின் செயல்பாடு கேள்விக்குறியதாக இருக்கிறது.
அரசு நீடிக்க கூடாது
மக்கள் பிரச்சனைகளை தீர்க்காத இந்த அரசு நீடிக்க கூடாது. ஊழலை ஒழிப்பேன் என கூறும் பிரதமர் ஊழல் அணிகளாக ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சேர்த்து வைக்கிறார்.
ஏமாற்றும் ஓபிஎஸ்
செயல்படாத ஆளுநர் இருப்பதால் இங்கே மத்திய அரசின் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. ஜெயலலிதா இறக்கும் வரை மருத்துவமனையில் இருந்த ஓபிஎஸ், நீதி விசாரணை கேட்பது என்பது ஏமாற்று வேலை.
எடப்பாடிக்கு எதிராக 26 எம்.எல்.ஏக்கள்
தமிழகத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முதல்வர்தான் செயல்படுகிறார். தற்போதைய தகவலின் படி எடப்பாடிக்கு 26 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால்...
சட்டசபையில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தால் எடப்பாடிக்கு 83 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தெரிவிப்பர். முதல்வர் எடப்பாடிக்கு எதிராக 150 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.