கருணாநிதி சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து இதுதான்.. பேரன்பை சுமந்து வந்த சங்கரன்!
கருணாநிதிக்கு முதியவர் ஒருவர் ஊன்றுகோல் கொண்டுவந்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீது வயது வித்தியாசமே இல்லாமல் அன்பும், பாசமும் கலந்த இன்ப மழை பொழிந்து வருகிறது. அது 5 வயது குழந்தையாகட்டும், 85 வயது முதியவர் ஆகட்டும்.
தங்கள் அன்பினை காட்ட வயது ஒரு பொருட்டே இல்லை என்பதும், அதற்காக எந்த மூலையில் இருந்தாலும் சிரத்தை எடுத்து மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை பார்த்து செல்லும் மனிதமும் விரிவடைந்து செல்கிறது.
பிரியத்தின் வெளிப்பாடு
ஏற்கனவே திருக்குவளையிலிருந்து தனியாக கிளம்பி வந்த 85 வயது மூதாட்டியாகட்டும், அம்பாசமுத்திரத்திலிருந்து கிளம்பி வந்த 87 வயது மூதாட்டியாகட்டும், தாத்தாவை காண ஓடிவந்த மிச்சேல் மிராக்ளின் என்ற 5 வயது சிறுமி ஆகட்டும்... எல்லாமே கருணாநிதி என்ற மூத்த தலைவரின் மேல் வைத்த அளவுகடந்த பிரியமே காரணம் ஆகும். மேலும் இந்த பிரியத்தின் வெளிப்பாடு மொட்டை போடுதல், அலகு குத்துதல் போன்ற வேண்டுதல்களிலும் நீண்டு வருகிறது.
ஊன்றுகோலுடன் முதியவர்
தற்போது அதேபோல ஆவடியை சேர்ந்த ஒரு முதியவர் ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு வந்தார். அண்ணனூரை சேர்ந்த இவரது பெயர் சங்கரன். இவர் அரசியல் தலைவர்கள்மீது நன்மதிப்பை வைத்திருப்பவர் என கூறப்படுகிறது. மருத்துவமனையில் வந்த அந்த முதியவரின் கையில் இரண்டு ஊன்றுகோல்கள் இருந்தன. ஒரு ஊன்றுகோலில் தான் தாங்கி பிடித்து நடந்து வந்தார்.
கருணாநிதிக்காக ஊன்றுகோல்
இதுபற்றி அங்கிருந்தவர்கள் அவரிடம் கேட்டபோது, மற்றொரு ஊன்றுகோல் கருணாநிதிக்காக வாங்கிவந்ததாக கூறினார். நேற்றுமுன்தினம் நாற்காலியில் மருத்துவர்கள் கருணாநிதியை உட்கார வைத்துள்ளனர், எனவே அவர் விரைவில் எழுந்து நடப்பார் என்று தான் முழுமையாக நம்புவதாகவும், அப்போது அவருக்கு உதவியாக இருக்கும் என்று இந்த ஊன்றுகோலை வாங்கி வந்ததாகவும் கூறினார்.
ஜெ.க்கு விபூதி அளித்தவர்
அதுமட்டுமல்லாமல் எந்த கட்சியையும் தான் சாராதவன் என்று தெரிவிக்கும் இந்த முதியவர், ஏற்கனவே ஜெயலலிதா அப்போலோவில் இருக்கும்போதும் விபூதியை பிரசாதமாக கொண்டுவந்து தந்திருக்கிறாராம். தற்போது இந்த ஊன்றுகோலை கருணாநிதியிடம் அளிக்க மருத்துவமனையில் காத்திருக்கிறார் முதியவர் சங்கரன். அரசியலையும் கடந்து அனைவர் மனதிலும் கருணாநிதி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது நித்தம் நித்தம் வெளிப்பட்டு செல்கிறது. ஊன்றுகோலை பிடித்து கருணாநிதி நடக்க வேண்டும் என்பது முதியவர் சங்கரனின் ஆசை மட்டும் அல்ல.. தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரின் ஆசையும் அதுவே!