தினகரன் பக்கம் 87 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் - நாஞ்சில் சம்பத் பொளேர்
டிடிவி தினகரன் கோஷ்டியில் 87 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் பக்கம் 87 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதிமுகவில் அவர் கண்ணசைவின்றி எதுவும் நடக்காது என்றும் அரசியலில் தினகரன் வளர்வதை தடுப்பதற்கு டெல்லி சதி செய்கிறது என்றும் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் செவ்வாய்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லியில் இருந்து டிடிவி தினகரனை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு அவரை வரவேற்க நாஞ்சில் சம்பத் சென்றிருந்தார்.
பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு குறித்தும் விசாரணை குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் மீது பொய்வழக்கு புனையப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
எந்த விலையும் தர தயார்
டெல்லி போலீசார் நடத்தும் விசாரணையால் எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை என்று கூறிய அவர் டி.டி.வி.தினகரனை காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
வளர்ச்சியை தடுக்க சதி
அதிமுகவில் டிடிவி தினகரன் கண்ணசைவு இன்றி எதுவும் நடக்காது என்றும் கூறினார். டி.டி.வி. மீதான நடவடிக்கைக்கு டெல்லி தான் காரணம் என்றும் டிடிவி தினகரனின் வளர்ச்சியை தடுக்க டெல்லியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
87 எம்எல்ஏக்கள்
122 எம்எல்ஏக்கள் இணைந்து தற்போது ஆட்சி நடக்கிறது. அமைச்சர்கள் தாங்களாக ஒரு முடிவு எடுத்துள்ளனர். டிடிவி தினகரன் பக்கம் 87 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றார். இரு அணிகளும் இணைந்தால் மகிழ்ச்சி என்றும் கூறினார்.
சரித்திர அநீதி
டெல்லி போலீசாரின் விசரணைக்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். இயக்கத்தின் சுமையை தோலில் சுமத்தவர் சசிகலா. அதிமுக தலையகத்தில் இருந்து சசிகலா பேனர் அகற்றப்பட்டிருப்பது சரித்திர அநீதி என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.