செங்கல்பட்டில் பரபரப்பு... சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 9 பேர் ஓட்டம்... 6 பேர் சிக்கினர்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் உள்ள சிறுவர் சீர்திருத்ப் பள்ளியிலிருந்து 9 சிறார்கள், வாட்ச்மேனைத் தாக்கி விட்டுத் தப்பி ஓடினர். அதில் 6 பேரை போலீஸார் மீண்டும் பிடித்து விட்டனர். 3 பேரைத் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு தாலுகா அலுவலக வளாகத்திற்குள் சிறுவர் சீர்திருத்தபள்ளி உள்ளது. பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதான 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
2 நாட்களுக்கு முன்பு இரவு 10.30 மணி அளவில் 9 சிறுவர்கள் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து வெளியே வந்தனர். பின்னர் பிரதான நுழைவு வாயில் அருகே வந்து நைசாக வெளியே செல்ல முயன்றனர். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி செந்தில் மற்றும் சமையல்காரர் முரளி ஆகியோர் அவர்களை தடுத்து விசாரித்தனர். அப்போது திடீரென்று அந்த சிறுவர்கள் அவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு வெளியே தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து சீர்திருத்த பள்ளியின் கண்காணிப்பாளர் ராமநாதன், செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.
நேற்று இரவு 11 மணி அளவில் செங்கல்பட்டு மற்றும் புலிப்பாக்கம் மலைப்பகுதிகளில் சுற்றித்திரிந்த 5 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். நேற்று காலையில் ஒரு சிறுவன் பிடிபட்டான். மற்ற 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 6 சிறுவர்களையும் போலீசார் செங்கல்பட்டு சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைத்தனர்.