தேவாசீர்வாதத்திற்கு நேரம் சரியில்லை.. 19 நாளில் மீண்டும் மாற்றம்.. இம்முறை மத்திய பணிக்கு!
டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை: டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை நல்வாழ்வு துறை ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்ட 16 நாட்களில் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம்தான் தமிழக உளவுத் துறை ஐ.ஜி. பதவியில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல்துறை நல்வாழ்வு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, உளவுத் துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு 11 நாட்களில், அவர் காவல்துறை நல்வாழ்வு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். மீண்டும் 16 நாட்களில் மத்திய அரசு பணிக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு துறை இணை இயக்குனராக இருந்த ஜி. வெங்கடராமன் மற்றும் திருப்பூர் நகர கமிஷனராக இருந்த சஞ்சய் மாத்தூர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை ரேஞ்ச்சில் அதிகாரியாக இருந்த ஆனந்த் குமார் சோமணி, விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கே.எஸ். நரேந்திரன் நாயர், ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பி. விஜயகுமார் ஆகியோர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏ. சரவணன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர எஸ். பிதாரி ஆகியோரும் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.