ஒகேனக்கல் பஸ் விபத்தில் 9 பேர் பலி: தமிழக அரசு தலா 3 லட்சம் நிவாரணம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மலைப்பாதையில் இருந்து அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா. 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடியிலிருந்து ஒகேனக்கல் வழியாக 65க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அஞ்செட்டிக்கு மலைப்பாதை வழியாக இன்று அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்து மதியம் 1 மணியளவில் ஒகேனக்கல் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடுத்து உள்ள கொண்டை ஊசி திருப்பத்தில் திரும்பும்போது சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 3 ஆண்கள், 2 பெண்கள், இரண்டு குழந்தைகள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பேருந்து ஓட்டுனர் உள்பட மற்ற அனைத்து பயணிகளும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதனிடையே சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும், 9பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு நிவாரணம்
பேருந்து விபத்தில் பலியான 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து அஞ்செட்டிக்கு சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ், ஒகேனக்கல் அருகே மலைப்பாதையில் ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில், 9 பேர் பலியானார்கள். பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பலியான 9 பேரின் குடும்பங்களுக்கு, ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில், தலா ரூ.3 லட்சம் நிதி உதவி உடனடியாக வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். மேலும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிப்பதற்காக, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை சம்பவ இடத்துக்கு முதல்வர் அனுப்பிவைத்துள்ளார்''என்று கூறப்பட்டுள்ளது.