அமைச்சர் கருப்பணணை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை முயற்சி.. ஈரோட்டில் பரபரப்பு
அமைச்சர் கருப்பணணை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணணை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஓடைக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மூச்சு திணறல், சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை மனு அளித்துள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணனிடமும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவர் மனைவி பூங்கொடி தாயார் நாகம்மாள் மற்றும் தனது மகன்கள், மகள்கள் என 9 பேருடன் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது பஞ்சு ஆலை கழிவு பாதிப்பால் நாங்கள் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை எல்லோரிடமும் மனு கொடுத்து முறையிட்டு விட்டோம் எனக் கூறிய அவர்கள் 9 பேரும் தங்கள் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சுற்றுச் சுழல் பாதிப்புக்கு சுற்றுச்சூழல் அமைச்சரே துணையாக இருப்பதும் அமைச்சரை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.