போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டாஸ்! சிறையில் அடைப்பு!
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 100 போலி பாஸ்போர்ட்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த ஹரிகுமார், சுரேஷ், சரவணன், குணாலன் உள்பட 10 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம், பாஸ்போர்ட்களை விரைவாக பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 100 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் இலங்கை, பங்களாதேஷ் போன்ற சர்வதேச நாடுகளின் சீல்கள் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தையும் அவர்களே போலியாக தயாரித்திருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் வைத்து நடத்தி இளைஞர்களை ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 பேர் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.