தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டுவீச்சு: விசாரிக்க 9 தனிப்படைகள்!
தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது குறித்து விசாரிக்க 9 தனிப்படைக்ள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காவல்துறை உயரதிகாரிகள் வழக்கை நுண்ணறிவு பிரிவு போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட வழக்கில் 3 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீஸ் தேனாம்பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 80 பேரிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் இதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த காவல்துறை உயரதிகாரிகள் வழக்கை நுண்ணறிவு பிரிவு போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர்.இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் 6 நுண்ணறிவு துணை ஆணையர்கள் மற்றும் 12 ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற குழுவின் ஆலோசனை கூட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பது குறித்த யூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே மண்ணெண்ணெய் குண்டுவீச்சு கலந்தாய்வு குறித்து விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.