திருவண்ணாமலை கோயிலில் ட்ரோன் காமிரா.. உக்ரைன் நாட்டுக்காரர்கள் 9 பேர் சிக்கினர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை ட்ரோன் காமிரா மூலம் படம்பிடித்த உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 பேரிடம், சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிவராத்திரி நெருங்கிவரும் நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் களை கட்டியுள்ளது. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகப்படியான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.
பக்தர்களோடு வந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 பேரின் நடவடிக்கையில் காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அந்த 9 பேரில் 6 பேர் ஆண்கள் எஞ்சியவர்கள் பெண்களாகும்.
ட்ரோன் காமிரா மூலம் படம் பிடிக்க வேண்டுமானால் காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பது இந்தியாவிலுள்ள சட்ட நடைமுறை. அதிலும், கோயில்கள் போன்ற முக்கிய இடங்களில் ட்ரோன் காமிராக்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை.
இந்நிலையில், உக்ரைன் நாட்டுக்காரர்கள் இவ்வாறு, ட்ரோன் காமிராவை பயன்படுத்தி படம் பிடித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறை போட்டு பார்த்து வருகிறது.
இதுவரை அந்த நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.