ஆசையாக சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்த பணம்.. கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய விழுப்புரம் சிறுமி
Recommended Video
விழுப்புரம்: சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மழை நின்றாலும் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.
மாநிலத்தில் 19,512 கோடிக்கு சேதம் ஏற்பட்டுவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
நிதியுதவி
கேரளத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர மற்ற மாநில மக்கள் மனமுன்வந்து நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். இதையடுத்து தமிழகம், டெல்லி, தெலுங்கானா, ஆந்திரம், மேற்கு வங்கம், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் நிதியை அளித்துள்ளன.
பேக் செய்யப்பட்டு முகாம்களுக்கு
தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே சென்று நிவாரண பொருட்களை சேகரித்து வருகின்றனர். அவற்றை பேக் செய்து குறிப்பிட்ட நிவாரண முகாம்களுக்கு அனுப்புகின்றனர்.
8 வயது சிறுமி நிதியுதவி
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கே கே ரோடு சிவராம் பகுதியை சேர்ந்தவர் சிவசண்முகநாதன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு அனுப்பிரியா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் சேமித்து வைத்த ரூ.9000 பணத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
4 ஆண்டுகளாக சேர்த்த பணம்
பிறந்தநாளன்று சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சிறுமி சேர்த்த பணத்தை நிவாரண நிதிக்கு அளித்துள்ளதை அறிந்த பள்ளி நிர்வாகமும் அக்கம்பக்கத்தினரும் சிறுமியை பாராட்டி வருகின்றனர். இதை பார்க்கும் போது சந்திரபாபு பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை.....
கேரளாவுக்கு எத்தனையோ பேர் உதவினாலும் ஒரு சிலர் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், அள்ளி கொடுக்க வேண்டிய நேரத்தில் கிள்ளி கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.