சென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டாச்சாம்!
சென்னை: சென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், "தமிழகம் முழுவதும் போலியோவை ஒழிக்க சுகாதாரத்துறை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
சென்னை மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட 6 லட்சத்து 73 ஆயிரத்து 169 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 1,375 நிரந்தர முகாம்களும், பஸ்-ரயில் நிலையம், கடற்கரை பகுதிகளில் 156 இதர மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கூடுதலாக 39 நடமாடும் மையங்கள் என மொத்தம் 1,570 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதில் சென்னையில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 940 குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெற்று பயனடைந்துள்ளனர். இது மொத்தம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 96.3 சதவீதம் ஆகும். தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாக ஆய்வு செய்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.