தயவு செய்து 'நீங்கல்லாம்', 96 திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கால் வைக்காதீர்கள்!
Recommended Video
சென்னை: 96 என்பது வழக்கமான ஒரு சினிமா கிடையாது. அது ஒரு அனுபவம்.
போய் சேர வேண்டிய இடம் முக்கியமில்லை, போகும் வழியெங்கும் கிடைக்கும் அனுபவம் முக்கியம். எனவே பயணத்தை நேசியுங்கள் என்று சொல்வார்கள் தெரியுமா, அதுபோல, ஒவ்வொரு பிரேமும் உங்களை அனுபவத்திற்குள் அழைத்து செல்லும் வாசல்.
இந்த வரிகளை உள்வாங்காமல் தியேட்டருக்குள் யாரும் காலடி எடுத்து வைக்காதீர்கள். அப்படியே வைத்தாலும், உங்கள் வாயை மூடிக்கொண்டு இருங்கள். அப்படி முடியாவிட்டால் இடைவேளைக்கு முன்பே வெளியே கிளம்புங்கள். இல்லை, இல்லை.. கொடுத்த காசுக்கு ஏசி காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியாது என்றால், திரையை பார்க்காமல், செல்போனை பாருங்கள். ஹெட்போனை மாட்டியபடி கேம்ஸ் ஆடிக்கொண்டிருங்கள். ப்ளீஸ்.
தியேட்டர்களில் விழாக்கோலம்
'96' சமகால தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் பிரளயத்தையே உருவாக்கியுள்ள திரைப்படம். 30 வயதுக்கு மேற்பட்ட 80ஸ் கிட்ஸ்களுக்கு (அந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள்) மிகவும் பிடித்த படம் என்ற முன்னுரைகள்தான் மூலை முடுக்கெல்லாம் கேட்டன. ஆனால், தியேட்டரில் பார்த்தாலோ, வருவோருக்கு வயது வித்தியாசம் இல்லை. 17 வயது பெண்ணும் காதலனோடு வருகிறாள், 60 வயது பாட்டியும், பாப்கார்ன் கொரிக்கிறார். மிஞ்சிப்போனால் மொத்த திரையரங்கில் 30 சதவீதம் பேர்தான், 30-40 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள்.
படத்திற்குள் பயணம்
ஆனால் படம் ஆரம்பித்த பிறகு, அந்த 30 சதவீதம் இருக்கைகளில் இருந்து எந்த சத்தமும் வருவதில்லை. 70 சதவீதம்தான் ஆர்ப்பரிக்கிறது. சத்தம் வராத இருக்கைகளில் இருப்பவர்கள் யாருமே மனதளவில் தியேட்டரில் இல்லை. அவர்கள் பள்ளியின் ஏதோ ஒரு பெஞ்சிலோ, சிங்கப்பூர் ஜானு பயணிக்கும் மெட்ரோ ரயிலின் ஒரு கோச்சிலோதான் அமர்ந்து கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு பகுதியை பிணைத்து, இந்த படம் அவர்களை திரைக்குள் கொண்டு செல்கிறது. ராம், ஜானு வெட்கப்பட்டால் இவர்கள் வெட்கப்படுகிறார்கள், சிரித்தால் சிரிக்கிறார்கள். அழுதால், கர்ச்சீப்பால் இவர்கள் கண்களை துடைக்கிறார்கள்.
கோடிட்ட இடங்களை நிரப்ப வேண்டாம்
படம் இவர்களுக்கானது. இவர்கள் கொண்டாடுவதற்கானது. ஆனால் நாம் சொல்லும், விஷயம் இவர்களை பற்றியல்ல. எஞ்சிய இளசுகளை பற்றியது. முரட்டு சிங்கிள்களை பற்றியது. படத்தின் நிறைய பகுதிகள் மவுனமாக கலைவது முரட்டு சிங்கிள்களுக்கு வசதியாகிவிடுகிறது. கோடிட்ட இடங்களை நிரம்புகிறேன் பேர்வழி என்று இவர்கள் அடிக்கும் கமெண்ட்ஸ், 80ஸ் கிட்ஸ் கைகளில், ரட்சகன், நாகார்ஜுனா போல நரம்புகளை புடைக்கச் செய்கிறது. அவர்கள் அனுபவ பாதையின் வழியில் முள் வெட்டி போடுகிறது. "அடேய்**** பயலே, வாய மூடித் தொல" என்று மைண்ட்வாய்ஸ் என நினைத்து சத்தமாக அவர்கள் முனுமுனுப்பது 2 சீீட்டுக்கு அப்பாலும் கேட்கிறது.
என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா
நமது பெங்களூர் வாசகர் ஒருவருக்கு கிடைத்த அனுபவம் இதிலிருந்து வேறுபட்டது. ஆனால் விஷயம் ஒன்றுதான். இவர் பாதிக்கப்பட்டது, இளைஞர்களால் அல்ல, இளைஞிகளால். 3 இளம் பெண்கள் மொத்தமாக வந்து இவர் சீட்டுக்கு அடுத்தபடியாக அமர்ந்து கொண்டு, தங்களுக்குள் படத்தை பற்றி கமெண்ட் அடித்து கடுப்பேற்ற, இடைவேளைக்கு முன்பு, ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துள்ளார் இவர். அப்படியே சீட்டிலிருந்து முன்னால் நகர்ந்து போய், மூன்று பேர் முகத்தையும் முறைத்து பார்த்துள்ளார். பிறகு கொஞ்சம் சத்தத்தை குறைத்துள்ளனர் அந்த பொடுசுகள். பின்ன இருக்காதா.. பிஜிஎம்மை ரசிக்க வேண்டும், கதாப்பாத்திரங்கள் பேசுவது ஒவ்வொன்றும் தெளிவாக காதில் விழுந்து இதயம் கரைய வேண்டும் என்பதற்காக அதிக விலை கொடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு சென்றால், இந்த அற்ப பதர்களின், மொக்க ஜோக்குகளையா கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற தார்மீக ஆதங்கம் அவருக்கு. ஆனால் இடைவேளை விட்டதும், அப்படியே ரெஸ்ட் ரூம் ஓடியவர்தானாம். மீண்டும் படம் ஆரம்பித்த பிறகு இருட்டுக்குள்தான் சீட்டுக்கு வந்துள்ளார். மொக்க ஜோக் பார்டிகள் முகத்தை பார்த்தால் கூட போலீசை கூப்பிட தோன்றும் அளவுக்கு வெறி ஏறிவிடும் என்பதுதான் இதற்கு காரணம் என்று பல்லைகடித்தார் அந்த வாசகர்.
இருக்கு, இன்னும் உணர்ச்சிகள் இருக்கு
ஆனால், இடைவேளைக்கு பிறகு, இருவரும் பேசிய தருணத்தில் ரசிகர்கள் கரைந்துகொண்டிருந்தபோது, ஜானு தனது பெட்டின் மீது ஏறி உட்கார ராமை அழைக்கும் காட்சி வரும். அப்போது, 'ஆ..' என்று அதிர்ச்சி ரியாக்ஷன் ஒன்றை அந்த இளைஞி கொடுக்க இதை உலக மகா ஜோக் ரேஞ்சில் கூட உட்கார்ந்திருந்த தோழிகள் சிரிக்க, மொத்த தியேட்டரும், எழுந்து நின்று அந்த மூவரையும் பார்த்து முறைத்ததாம். அப்போதுதான் இவர் படத்துக்கு சென்ற திருப்தி முழுமையாக கிடைத்தது என்று நெஞ்சம் நெகிழ சொல்ல மறக்கவில்லை நமது வாசகர்.
எங்கே போனது உணர்வுகள்
எந்த ஒரு சீரியஸ் விஷயத்தையும் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல், அதை மீம்ஸ் ஆக்குவது, அதற்கு மொக்கையாக கவுண்டர் கொடுத்து ரசிப்பது என்பது 2k கிட்ஸ் வழக்கமாகிவிட்டது. இதுதான் அரசியல் புரிதலை கூட மோசமாக்கி வைத்து, மோசமான அரசியல்வாதிகளுக்கு வசதியை கொடுக்கிறது. இப்போது இது அரசியலை தாண்டி கலைக்குள்ளும் ஊடுருவிவிட்டது என்பதைத்தான் 96 படத்தை பார்க்க வந்துவிட்டு கமெண்ட்ஸ் அடிக்கும் இளசுகளின் பொதுப்புத்தி காட்டுகிறது. இதே நிலை நீடித்தால், உணர்வுகள், உணர்ச்சிகளுக்கு வேலையின்றி, மீம்கள் மட்டுமே நமது வாழ்க்கையை ஆக்கிரமிக்கும். அது அன்பு, காதல், தாய்மை என்ற அதி உன்னத உணர்வுகளை மழுங்கடித்து, மனிதர்களை கேலி பொருட்களாக மட்டுமே மாற்றும்.
காலமெல்லாம் காதல் வாழும்
இப்படியான மனநிலை உள்ளவர்களுக்கு தமிழ்படம் 2 போதும். தயவு செய்து 96 ஓடும் திரையரங்குகள் பக்கம் உங்கள் காலை எடுத்து வைத்து, இருக்கும் ஒரு சில நல்ல உள்ளங்களிலும் நஞ்சை கலக்காதீர்கள். ஆனால், நமது வாசகர் சொன்னதில் ஒரு ஆறுதல். இடதுபுறம் அமர்ந்திருந்த மூவர்தான் அப்படி. வலதுபுறம் அமர்ந்திருந்த 19 வயது மதிப்புள்ள காதல் ஜோடிகள், இந்த படம் யாருக்கானது என்பதை காட்டிவிட்டார்கள் என்றார். அப்படி என்ன நடந்ததாம்? ராமின் மாணவிகளிடம், ஜானு பேசும் காட்சியில், நான் உடனே லவ்வுக்கு ஓகே சொல்லிவிட்டேன் என்பார். அதற்கு, மாணவி ஒருவர், உங்க ரேஞ்சுக்கு நீங்க ஒருவாரமாவது அலைய விட்டிருக்கனும், அதுவும் இவரை 1 மாசம் அலைய விட்டிருக்கலாம் என்பார். அப்போது தியேட்டரில் தனது காதலனை பார்த்து அந்த இளம் பெண் சொன்னது, "உன்னை ஒரு வருஷமாவது அலைய விட்டிருக்கனும்டா. நானும் உடனே ஓகே சொல்லியிருக்க கூடாது". இதுதான் 96. இந்த 2k கிட்சும் படத்துடன் தன்னை பொருத்தி பார்க்க முடிகிறதே அங்குதான் ஜெயிக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். காதலுக்கு ஏது வயது? 96 காதலுக்காகவும், காதலர்களுக்காகவும் மட்டுமானது. கயவர்களுக்கு அங்கு இடம் இல்லை!