நினைவில் வந்து போகும் வெள்ளைச்சட்டையும், நீல நிறமும் #96
Recommended Video
சென்னை: திரையரங்கில் அனைவரும் ரசிக்கும் படி ஒரு நல்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. அந்த தாகத்தை தீர்த்தது "96" !
எந்த மனிதனையும் கெட்டவனாக திரையில் காட்டவில்லை. எந்த ஜாதி, மத பிரச்சாரமும் செய்யவில்லை. எந்த ஒரு காட்சியிலும் புகைப்பிடிக்கும் படியோ, மது அருந்தும் படியோ திரைக்கதை அமைக்காத இயக்குனர் அவர்களுக்கு நன்றிகள் பல! இது படம் மட்டும் அல்ல நிறைய இயக்குனர்களுக்கு பாடமும் கூட!
நீண்ட வருடங்களுக்கு பிறகு உறுத்தாத மெல்லிய இசைக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் கோவிந்த் மேனன். இடைஇடையே வரும் இளையராஜா அவர்களின் பழைய பாடல் வரிகள் நம்மை அழ செய்து ஆனந்த கூத்தாட வைக்கிறது.
ராம் எனும் விஜய்சேதுபதியின் வெட்கமும், ஜானு எனும் திரிஷாவின் உணர்வுகளும் இன்னும் வெகு நாட்கள் கண்ணிலும் மனதிலும் நிற்கும்!
நம் வாழ்வில் சந்தித்த நட்பு, காதல், சகோதரி பாசம் என்பதை முடிந்த அளவு இயல்பாக திரையில் காட்டிய இயக்குனர் பிரேம் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
பள்ளி சீருடை உங்கள் நினைவில் வந்து போவது உறுதி! எனக்கு வெள்ளைச் சட்டையும், நீல நிறமும் நினைவில் வந்து போனது போல!
அதிக அறிவாய் எல்லாம் யோசிக்காமல் திரையரங்குக்கு சென்று இந்த படத்தை ரசித்து வாருங்கள்... கொண்டாடுங்கள்.
- காளிதாஸ் ஈஸ்வரன்
[வழி நெடுக கவிதைகள்... 2 மணி நேர ஆலாபனை....!]
---
96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்
நேற்றைய தினம் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தினை எனது காதல் மனைவியுடன் பார்க்க கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் நேரான விமர்சனக்களை (positive review) பார்த்த பின்னரே இப்படத்திற்கு போகும் எண்ணம் எனக்குள் எழுந்தது.
தங்கள் பாடசாலை பருவ காதலை இப்படத்தினூடாக அனுபவித்ததாக பலர் கருத்துக்கூறியிருந்தனர். என்னை பொறுத்தவரையில் எனது சொந்த வாழ்க்கையையும் தாண்டி பலரது தனிப்பட்ட விசயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் பள்ளி பருவ காதலையும் தாண்டி கல்லூரியில் காதலித்தவர்கள் முதல், வேலைத்தளத்தில் காதலித்தவர்கள் என வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலித்தவர்களுக்குத் இப்படத்தில் வரும் பல காட்சிகள் தங்களது கடந்த வாழ்க்கையுடனும் மனதுடனும் ஒன்றித்து பயணிக்கும் என்பது நிதர்சனம்.
அதிலும் நீங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு அடிமையென்றால் இப்படம் உங்கள் மனதில் பல நாட்களுக்கு நிழலாடும்.
எனக்கு பிடித்த காட்சிகளாக
1. படத்தின் ஆரம்பத்தில் புகைப்படக்கலைக்கு "அக்கணம் நமக்கு சொந்தம்" என்று கூறப்படும் விளக்கம்
2. Get together சமயத்தில் விஜய் சேதுபதி "யமுனை ஆற்றிலே" பாடலை பாட சொல்லும் விதம்..
3. காதலே காதலே பாடல் மற்றும் அதன் ஒளிப்பதிவு
4. திரிஷா விஜய் சேதுபதியின் மாணவர்களிடம் எப்படி விஜய் சேதுபதி propose பண்ணினார் என கூறுவது...
5. சேர் நல்லவர் என்று தெரியும் ஆனா எப்படி நல்லா பாத்துக்கிர்ரது தெரியல்ல என்று திரிஷா கூறி நெகிழும் காட்சி...
6. படத்தின் climax இல் இன்னும் கொஞ்சம் நேரம் உன்னுடன் இருக்கவா என திரிஷா கேட்கும் தருனமும்; திரிஷா விஜய் சேதுபதி அழுவதும்; திரிஷா விஜய் சேதுபதி இருவரும் நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவிக்கும் தவிப்பும் திரிஷா விஜய் சேதுபதியின் கண்களை மூடுவதும் ( முழு climax என்று வைத்துக் கொள்ளலாம்)
7. இன்னுமொரு சிறப்பான விசயம் என்னென்றால் இருவரும் தனிமையிலும் தங்களது கட்டுப்பாட்டை மீறாமல் இருப்பது....
8. படம் முழுக்க "டா" போட்டு திரிஷா சேதுபதியை விளிக்கும் காட்சிகள் காதலைத் தாண்டிய நட்பை பிரதிபலிக்கின்றன. 30 வயதாகியும் என்னையும் பாசத்துடன் "டா" என்றழைக்கும் நண்பிகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். எப்பூடி!!
இன்னும் பல காட்சிகள் பிடித்திருந்தாலும் மேலுள்ளவை மனதில் பதிந்து விட்டன.
படத்தை ஒரு முறை தியேட்டருக்குப் போய் பாருங்கள்; காதலியினை ஏதாவது ஒரு காரணத்திற்காக பிரிந்திருந்தால் மீண்டும் அவள் அவளாகவே நமக்கு கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்துடன் திரையரங்கை விட்டு வெளியேறுவீர்கள்; உங்கள் காதல் உண்மையாக இருந்தால்.
- சுஹைல் ஜமால்தீன்
---
மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்றிரவு 96 படம் பார்க்க சென்றேன்...
என்னையும், எங்கிருக்கிறேன் என்பதையும் , எந்த காலக்கட்டத்தில் உள்ளோம் என்பதெல்லாம் முற்றிலுமாக மறந்து திரைப்படத்தில் மூழ்கி விட்டேன். எப்படி ஒரு நல்லதொரு புத்தகம் படிக்கும்போது நம்மை முற்றிலுமாக மறப்போமா அப்படியே...!!!
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மனதோடு மிக நெருக்கமாக ஒட்டிக்கொண்ட ஒரு படம் என்று கூறுவேன்..ஒவ்வொரு காட்சியும் காவியமாக இருந்தது. மிகவும் ரசித்து பார்த்தேன்...காட்சிகளை கண்டுகொண்டு இருந்தபோதே...யாருய்யா இயக்குனர்... இந்தப்படத்துக்கு, என்று மனம் எண்ணிக்கொண்டிருந்தது.. கிடைத்த வாய்ப்பினை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார்..
விஜய் சேதுபதி, திரிஷா இருவருமே மிக அருமையாக அந்த பாத்திரங்களாக நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என்றே கூறலாம்.
இருவரின் இளவயது கதாபாத்திரங்களுக்கும் நடிகர் நடிகை தேர்வும் அவர்களின் நடிப்பும் மிக அற்புதம். படத்தினிலே அந்தக்காலத்திய இளையராஜாவின் பாடல்களை இசையின்றி இளவயது கதாநாயகி பாடுவதை கேட்கும்போதே மனம் சிலிர்த்தது. கதைகளை படிப்பதில் மிக ஆர்வமுடைய எனக்கு நல்லதொரு காவியத்தினை ரசித்துப் படித்த உணர்வு.. படத்தின் கதை விமர்சனங்கள் ஏராளமாக நானே பகிர்ந்து விட்டேன். ஆகவே திரும்ப அதிகம் கூற வேண்டியதில்லை.
யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே... பாடலை கதாநாயகன் விரும்பி பாடக்கேட்டும் வேண்டுமென்றே...கதாநாயகி தவிர்க்கிறாள். இயக்குனர் நிச்சயம் அந்த பாடலை பாட வைப்பார் ....ஆனால் எங்கே...
பிரியும்போது பாடிவிட்டு ஓடிவிடுவாளோ... என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தபோது, அந்த நள்ளிரவில் ...பிரிய சில மணி நேரங்கள் இருக்கும் பொழுதிலே, சந்தோஷ, மற்றும் குற்ற உணர்வின் உச்சத்தில் இருக்கும் நாயகி, இருக்கும் நேரங்களை அனுபவித்து ரசித்துக்கொண்டிருக்கும் நாயகி, திடீரென அந்த மின்வெட்டு சமயத்தினில் நாயகன் வெளிச்சத்துக்கு உரிய பொருளை எடுக்க செல்லும் வேளையில் திடீரென அந்த பாடலை பாடுவது கதாநாயகனுக்கு மட்டுமல்ல நமக்கே ஒரு இன்ப அதிர்ச்சி....
இந்தப் படத்துக்கு இசை பரவாயில்லை ரகம்... இந்தப்படத்தை மட்டும் பாடல் மற்றும் இசைப் பின்னணிக்கு இளையராஜா கையிலே ஒப்படைத்திருந்தால் இந்தப்படம் இன்னும் எங்கோ எட்ட முடியாத உயரத்துக்கு போயிருக்கும். ஒன்று மட்டுமே மனதில் மீண்டும் தோன்றியது... செலவு அதிகம் செய்யாமல் இது போன்ற தரமான ரசிக்கத்தக்க படங்களை எடுங்கள்..
தயாரிப்பாளர்களே...திறமையாளர்களுக்கு ஆதரவளியுங்கள்... இதுபோன்ற படங்கள் வெற்றி பெற்றால் தமிழ் திரைத்துறை வாழும்.. தயாரிப்பாளர்களும் வாழ்வார்கள்.. தொன்னூற்று ஆறு... தமிழ் திரைப்பட படைப்புகளில் ஒரு வரலாறு.
எஸ். பாலசுப்ரமணியன், பஹ்ரைன்
உங்களோட "96" அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே! #96themovie