குற்றாலம் அருவியில் சோப்பு, ஷாம்பு போட்டுக் குளித்த 98 பேருக்கு அபராதம்
நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திய 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதையும் மீறி யாராவது சோப்பு, ஷாம்பு பயன்படுத்துகிறார்களா என நகர பஞ்சாயத்து ஊழியர்கள் 2 பேர் காலை முதல் மாலை வரை அருவிக்கரைகளை கண்காணித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உடனடி அபராதம் ரூபாய் 100 விதிக்கப்படுகிறது.
சோப்பு, ஷாம்பு தேய்ப்பவர்கள் கண்டறியப்பட்ட உடன் அவர்கள் அப்படியே அருவிப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். உடலில் எண்ணெய் தேய்த்து வருபவர்களும் அப்படியே வெளியேற்றப்படுகிறார்கள்.
அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது கண்டறியப்பட்டு கடந்த 4 ஆம் தேதி முதல் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டுள்ளது.