இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 99 பேர் விடுதலை
சென்னை: இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அப்போது மீனவர்களின் படகுகளும், மீன் பிடி சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 99 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 94 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அவ்வப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் நடந்த இந்தியா - இலங்கைக் கூட்டுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட பொருளாதாரம், வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மீனவர்கள் விடுதலை குறித்து மட்டுமே இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.