தனியார் பள்ளி நெருக்கடி.. 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை: சரியாகப் படிக்கவில்லை என தனியார் பள்ளி நிர்வாகம் கொடுத்த நெருக்கடி காரணமாக சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் பிரசாந்த் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் 9-ம் வகுப்பிலேயே மாணவர்களை வடிகட்டுவதை வழக்கமாக வைத்துள்ளன. இப்போது அரசுப் பள்ளிகளிலும் கூட இந்த முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் மாணவர்களும் பெற்றோரும் பெருந்துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலுமே, 9- ம் வகுப்பு இறுதியில் சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வேறு பள்ளியைப் பாருங்கள் என்று அனுப்பிவிடுகின்றனர்.
மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோலி பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரசாந்த் (14). இவனது தாய் தந்தை பூ வியாபாரம் செய்து வருகிறார்கள்.
பள்ளி இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டான் பிரசாந்த். சமீபத்தில் பிரசாந்தின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், அவன் நான்கு பாடங்களில் தோல்வியடைந்திருப்பதாகவும், பத்தாம் வகுப்பு இந்தப் பள்ளியில் தொடர முடியாது என்றும் கூறிவிட்டார்களாம்.
இதனால் கடும் மன உளைச்சலடைந்த மாணவன் பிரசாந்த் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் துணை ஆய்வாளர் மணி கூறுகையில், "மாணவன் பிரசாந்த் சரியாகப் படிக்கவில்லை என்பதால், வேறு பள்ளிக்குப் போகச் சொல்லிவிட்டதாம் பள்ளி நிர்வாகம். அதன்காரணமாகவே இந்த தற்கொலை என்பது விசாரணையில் தெரிந்தது. வேட்டியை எடுத்து மின்விசிறி கொக்கியில் மாட்டி தூக்கிட்டுக் கொண்டுள்ளான் பிரசாந்த். அப்போது வீட்டில் அவன் அம்மா இல்லையாம். அப்பா ஹாலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததால், பிரசாந்த் தூக்கிட்டுக் கொண்டதே காலையில்தான் தெரிந்திருக்கிறது," என்றார்.
இந்தப் பள்ளியில் இது 6-வது தற்கொலை
இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகிறது. இதுவரை 6 மாணவர்கள் இதே போன்ற காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர். ஏற்கெனவே ஒரு தற்கொலை வழக்கில் இந்தப் பள்ளியின் தாளாளர் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.